தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் மானிய தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை பெறலாம்.
ஏற்கனவே உள்ள UYEGP மற்றும் NEED திட்டத்தில் பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில் செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி, சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர் 45 வயது வரை கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும் NEED திட்டத்தில் பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி., பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர்க்கு 55 வயது வரையிலும் வங்கியில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தொழில் முனைவோர் மானியம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.
தொழில் செய்ய தாட்கோ மூலம் மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பன் போன்ற மின் உபகரணங்கள் கொள்முதல் செய்ய தாட்கோ மூலம் ஒருவருக்கு ரூ.3 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக ரூ.90 ஆயிரம் வழங்கிட அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.