கொடைக்கானல் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக பாலியல் வழக்கு ஒன்றுக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது கொடைக்கானல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் கொடைக்கானலில் விடுதி ஒன்று நடத்தி வருகிறார் இவர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி கொடைக்கானல் சென்று இருக்கிறார். பின்னர் தனது காரில் விடுதி நோக்கி வந்து கொண்டிருந்தபோது மன்னவனூரை சார்ந்த ஜீவா என்ற 22 வயது இளைஞரும் பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் (26) என்ற இளைஞரும் இவரது காரை நிறுத்தி லிப்ட் கேட்டிருக்கின்றனர். இவரும் அவர்களை காரில் ஏற்றி இருக்கிறார். இந்நிலையில் காரில் பயணம் செய்த அந்த இளைஞர்கள் இந்தப் பெண்மணியிடம் அத்துமீறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இவர் அளித்த புகாரை கொண்டு விசாரணை நடத்திய காவல்துறை அந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தினர். காவல்துறையினரும் உடனடியாக குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதன் காரணமாக அனைத்து தரப்பு விசாரணையும் உடனடியாக முடிந்ததை அடுத்து நீதிபதி கார்த்திக் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கில் தீர்ப்பை வழங்கினார்.
அந்தத் தீர்ப்புப்படி குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களின் மீதான குற்றம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலும் விசாரணையின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளான ஜீவா மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு ஏழு வருட சிறை தண்டனையும் 20000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தீர்ப்பிற்கு பின் பேசிய நீதிபதி ஒரு பெண் தனக்காக போராடுகிறார் என்றால் அவர் தனக்காக மட்டும் போராடுகிறார் என்று அர்த்தம் இல்லை தான் சேர்ந்திருக்கக் கூடிய மொத்த பெண் இனத்திற்காகவும் பிரதிநிதியாக அவர் இருந்து போராடுவதாக அர்த்தம் ஆகும் என்று குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய நீதிபதி பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாலியல் துன்புறுத்துதல்களும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாத செயல் என கடுமையாக கூறினார்.