அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ட்ரீம்லைனர் விமானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் ஏர் இந்தியா 7 சர்வதேச விமானங்களை ரத்து செய்தது.
ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போயிங் 787-8 விமானம் மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் மற்றும் தரையில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூட்டு விசாரணையை தொடங்கினர். மேலும், ஏர் இந்தியாவின் அனைத்து ட்ரீம்லைனர் விமானங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
அஹமதாபாத் விபத்தைத் தொடர்ந்து விமான அதிகாரிகளின் பாதுகாப்பு ஆய்வு அதிகரித்ததைத் தொடர்ந்து, இன்று, ஏர் இந்தியா தனது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் முன்னெச்சரிக்கை சோதனைகளின் ஒரு பகுதியாக 3 சர்வதேச விமானங்களை ரத்து செய்தது.
இன்று மட்டும் மொத்தம் 7 ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் 6 போயிங் 787-8 ட்ரீம்லைனர்களால் இயக்க திட்டமிடப்பட்டிருந்தன.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள் என்னென்ன?
AI915 – டெல்லியிலிருந்து துபாய் – B788 ட்ரீம்லைனர்
AI153 – டெல்லியிலிருந்து வியன்னா – B788 ட்ரீம்லைனர்
AI143 – டெல்லியிலிருந்து பாரிஸ் – B788 ட்ரீம்லைனர்
AI159 – அகமதாபாத்திலிருந்து லண்டன் – B788 ட்ரீம்லைனர்
AI170 – லண்டன் முதல் அமிர்தசரஸ் – B788 ட்ரீம்லைனர்
AI133 – பெங்களூரு முதல் லண்டன் – B788 ட்ரீம்லைனர்
AI179 – மும்பை முதல் சான் பிரான்சிஸ்கோ – B777
டெல்லி-பாரிஸ் விமானத்தை பொறுத்தவரை, விமானப் பயணத்திற்கு முந்தைய சோதனைகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டதாகவும், அகமதாபாத்-லண்டன் பிரிவில் ஏற்பட்ட இடையூறு விமானம் கிடைக்காததால் ஏற்பட்டதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
மற்ற ரத்துகளுக்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இந்த கோர விபத்தை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்கள் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : விமான விபத்து.. பதைபதைக்க வைக்கும் புதிய வீடியோ.. எரியும் ஹாஸ்டலில் இருந்து குதிக்கும் மாணவர்கள்..