ஆடி மாதத்தின் 18ஆம் நாளை தமிழகம் முழுவதும் ‘ஆடிப்பெருக்கு’ திருவிழாவாக மக்கள் மிகவும் உற்சாகத்துடனும் வழிபாட்டுடனும் கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட தமிழகத்தில், வாழ்வாதாரமளிக்கும் நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரு நன்னாளாகவே இந்நாள் ஆண்டாண்டு காலமாகப் போற்றப்படுகிறது.
பழங்காலத்தில் ஆடிப் பெருக்கின்போது ஆறு மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை ஒட்டி, அனைத்து நீர்நிலைகளையும் காவிரி தாயாக பாவித்து ஆற்றங்கரைகளில் மக்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்துவது வழக்கமாக உள்ளது. பெருக்கு என்ற சொல்லுக்கேற்ப, இந்நாளில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகள், செய்யப்பெறும் தானங்கள், வாங்கப்படும் பொருட்கள் மற்றும் தொடங்கப்படும் சுபகாரியங்கள் அனைத்தும் பல மடங்காக பெருகும் என்பது மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
இதன் காரணமாகவே ஆடிப்பெருக்கு நன்னாளில் தங்கம், வெள்ளி, புதிய வாகனங்கள், சொத்துக்கள் வாங்குவது மற்றும் புதிய வியாபாரம், சுபகாரியப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது போன்றவற்றை மக்கள் பெரிதும் விரும்பிச் செய்கின்றனர். இருப்பினும், விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாதவர்கள் மனவருத்தம் அடைய தேவையில்லை. அதற்கு பதிலாக மிகச் சுலபமாகக் கிடைக்கக்கூடிய 3 எளிய மங்களப் பொருட்களை வாங்கி வழிபடலாம் என ஆன்மீக பெரியோர்கள் வழிகாட்டுகின்றனர்.
அதன்படி, ஆடிப்பெருக்கு அன்று கல் உப்பு, விரலி மஞ்சள் மற்றும் துவரம் பருப்பு ஆகிய மூன்று பொருட்களையும் மாலை 6 மணிக்குள் நல்நேரம் பார்த்து வாங்கி வந்து, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் அவற்றை தினசரி சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது வீட்டிற்கு மகாலட்சுமியின் பரிபூரண அருளைக் கொண்டு சேர்க்கும் எனக் கருதப்படுகிறது.
இதுமட்டுமன்றி அரிசி, குங்குமம், மாங்கல்யச் சரடு, பச்சை கற்பூரம், கண்ணாடி போன்ற பொருட்களையும் இந்நாளில் தாராளமாக வாங்கலாம். மேலும், திருமண பத்திரிகை அச்சடிக்க கொடுப்பது, புதிய வீடு கட்டுமானப் பணிகளை தொடங்குவது போன்ற மங்களகரமான காரியங்களை ஆடிப்பெருக்கில் தொடங்குவது நற்பலன்களை வாரி வழங்கும் என்பதில் ஐயமில்லை.
Read More : தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்..!! எம்பி ராகுல் காந்தி கடும் தாக்கு..!!



