சீனாவில் புத்தாண்டு விடுமுறை காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் ஒரு நாள் பலி எண்ணிக்கை 36,000-ஐ எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும், தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.. குறிப்பாக சீனாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது..
இந்நிலையில் சீனாவில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட அதிகமான கொரோனா இறப்புகள் பதிவாகக்கூடும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.. ஏர்ஃபினிட்டி (Airfinity) என்ற பகுப்பாய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. இதற்கு முன்பு இந்த நிறுவனம் வெளியிட்டுருந்த கணிப்பில் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை 25,000-ஆக இருக்கும் என்று கணித்திருந்தது.. இந்த நிலையில் தற்போது சீனாவில் புத்தாண்டு விடுமுறை காரணமாக மக்கள் அதிகமகாக பயணம் மேற்கொண்டதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக 36,000 பேர் கொரோனாவால் உயிரழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏர்ஃபினிட்டி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மாட் லின்லி இதுகுறித்து பேசிய போது ” கொரோனா பரவல் அதிக உச்சத்தை அடைவதைக் காண எதிர்பார்க்கிறோம்..அடுத்த 15 நாட்களுக்கு சீனாவின் சுகாதார அமைப்பில் குறிப்பிடத்தக்க சுமையை மதிப்பிட்டுள்ளோம். அடுத்த சில நாட்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழியும்.. இதனால் சிகிச்சையளிக்கக்கூடிய பல நோயாளிகள் இறக்கக்கூடும்” என்று தெரிவித்தார்..
சீனாவில் ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய சந்திர புத்தாண்டு விழா பிப்ரவரி 15 வரை நடைபெற உள்ளது.. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகளவில் பயணம் மேற்கொள்வர்.. எனவே கொரோனா பரவல் விரைவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது… அதாவது சீனாவில் ஜனவரி 13 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கு இடையில் 62 மில்லியன் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று ஏர்ஃபினிட்டி நிறுவனத்தின் திருத்தப்பட்ட கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரு நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4.8 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது..