விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் இது குறித்த முழு அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 டாஸ்மாக் மதுக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் நிறைவடைய உள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில் “500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் பாதுகாப்புகாக டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார். எனவே ஒரு வாரத்திற்குள் பட்டியல் தயாரானதும் மூடப்படப்போகும் 500 டாஸ்மாக் மதுபான கடைகளின் விவரங்கள் தெரிந்துவிடும். பின் விரைவில் அந்த 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று தெரிகிறது.