உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக ஸ்டீல் ஸ்பூன் சாப்பிட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குழந்தைகள் தெரியாத வயதில் மண்ணை அள்ளிச் சாப்பிடுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக ஸ்டீல் ஸ்பூன் சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள முஜாபர் நகரில் இருக்கும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் மையத்தில் விஜய் என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அப்போது அவரின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. இதையடுத்து, அவர் உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சோதனை செய்து பார்த்ததில் வயிற்றில் ஸ்பூன்கள் அதிக அளவில் இருந்தது தெரியவந்தது.

உடனே அவரிடம் ஸ்டீல் ஸ்பூன் சாப்பிடுவாயா என்று கேட்டதற்கு, கடந்த ஒரு ஆண்டுகளாக தான் தங்கியிருந்த மையத்தில் ஸ்பூனை சாப்பிடும்படி கொடுத்ததாக தெரிவித்தார். உடனே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை செய்து 63 ஸ்டீல் ஸ்பூன்களை வயிற்றில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த சிகிச்சை இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த அளவுக்கு வயிற்றில் இருந்து இதற்கு முன்பு பொருட்களை அகற்றியதில்லை என்று மருத்துவர் குரானா தெரிவித்துள்ளார். தற்போது விஜய் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் குடும்பத்தினர், விஜயை கட்டாயப்படுத்தி ஸ்பூன்களை சாப்பிட வைத்ததாக போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் மையத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும் விஜய், இந்த ஸ்பூன்களை விழுங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக ஒரு முறையும், தானே விரும்பி அதை விழுங்கினேன் என மற்றொரு முறையும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க விஜய் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் மட்டும் வெளியாகி இருக்கிறது.