திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சக்கிலியான் கொடையைச் சேர்ந்தவர் கண்ணன்( 55). விவசாயியான இவர், மாடுகளை வாங்கி விற்பனை செய்து வந்தார் இவர் நேற்று முன்தினம் படுகாயங்களுடன் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்தார். இது தொடர்பாக சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
காவல்துறையினர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணைக்கு பின் அவரது நெருங்கிய உறவினர்களாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டதை மறைப்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டதைப் போல தோட்டத்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டதும் தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கிய நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்களை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதாவது, இந்த கொலையில் தொடர்புடைய 9 பேர் காவல்துறையினரின் விசாரணையில் அகப்பட்டனர். உயிரிழந்த கண்ணனின் சகோதரி அழகி, அவருடைய கணவர் சின்னகாளை, மகன் அழகர்சாமி, கண்ணனின் தம்பி முருகன், அவருடைய மனைவி வெள்ளையம்மாள், மகன்கள் சதீஷ்குமார், குணா மற்றும் உறவினர்கள் நாச்சம்மாள், வெள்ளைச்சாமி உள்ளிட்ட 9 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர்களிடம் இந்த கொலைக்கான காரணம் பற்றி கேட்டபோது, 2.5 ஏக்கர் சொத்துக்காக தகராறு உண்டானது அதன் காரணமாகவே இந்த கொலையை செய்தோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் சாணார்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.