தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பரில் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாளில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது, ஏனெனில் அதன் மையில் பல பயோஆக்டிவ் பொருட்கள் இருப்பதால், எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களில் உணவை வைத்து சாப்பிடுவது என்பது ஆரோக்கியமற்ற பழக்கம். உணவு சுகாதாரமாக சமைக்கப்பட்டிருந்தாலும், அது போன்ற உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்நிலையில் அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவை பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து அருந்ததி அரசு என்பவர் இயக்கி உள்ள ‘கருப்பு மை’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை நேற்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.