மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை அருகே உள்ள சாக்கினாக்கா பகுதியில் குடியிருப்பவர் நசீம்கான்(22). இவருக்கும் ரூபினா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. கல்யாணத்திற்கு பிறகு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நசீமின் தந்தை, அவரை பார்க்க நசீமின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த நசீமின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியில் ரத்தக்கரையுடன் அழகிய நிலையில் சடலமாக கிடந்தார் நசீம்கான்.
அவரின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், அவரது மனைவி ரூபினாவை தேடினர் இதைத்தொடர்ந்து, ரூபினாவின் செல்போன் எண்ணை வைத்து அவரையும் அவரது ஆண் நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் கடந்த 14ஆம் தேதி அன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதனால் சமாதானப்படுத்த தனது ஆண் நண்பரை அழைத்துள்ளார். அந்த நண்பர் நசீமை சமாதானப்படுத்திய போது வாக்குவாதம் முற்றியதால் நசீம்கானின் தலையில் உண்டியலால் கடுமையாக தாக்கியுள்ளார்.
அதன் பிறகு நசீம்கான் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் நசீமின் உடலை படுக்கையறையில் கட்டிலின் கீழே வைத்துவிட்டு இருவரும் தலைமறைவாகி உள்ளனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதுதான் உண்மையான காரணமா என்பது குறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.