’நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தேசியக்கொடியை சூரிய உதயத்தில் இருந்து பறக்கவிட்டு, சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும். இதுதான் சட்ட நடைமுறை. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம் என்றும் இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசியக்கொடிக்கும், பாலியஸ்டர் தேசியக்கொடிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. ஆனால், அதற்போது இதிலும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தேசியக்கொடி கைகளால் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது எந்திரத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அது பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, பட்டு காதி ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கலாம். இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வருகிற பல்வேறு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த தகவல்களை பரப்பி விட வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திரதினம் ‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு ‘ஹர் கார் திரங்கா’ (வீடுதோறும் மூவர்ணக்கொடி) என்ற இயக்கத்தை அறிவித்தது. அதன்படி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.