தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு 1,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினமான ஆகஸ்ட்15-ம் தேதியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம், ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு 1,000 ரூபாயிலிருந்து 5000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.