சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னத்திரையில் இருந்து வந்த சந்தானம், வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, தெய்வத் திருமகள், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அப்போது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது.

பின்னர், கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, குலு குலு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடிக்கத் துவங்கினார். இந்நிலையில், நகைச்சுவை நடிகராக இருந்தபோதுதான் ரசிகர்களிடம் செல்வாக்கு இருந்ததாக அவரது நண்பர்கள் சிலர் சந்தானத்திற்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து சந்தானம் தீவிர யோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.