கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே இருக்கும் கல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துசாமி. இவருக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன், காசிநாதன் ஆகிய நான்கு மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் வெங்கடேசனும்(38), செஞ்சியை சேர்ந்த பிரேமலதாவும்(25) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் தம்பியான காசிநாதன் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து அண்ணி பிரேமலதாவை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தார். அதன் பிறகு ராமநத்தம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதை தொடர்ந்து காவல்துறையினர் காசிநாதனை கைது செய்தனர். காவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின் பின்வருமாறு:-
எனது இரண்டாவது அண்ணன் ரவியின் மனைவி ராதிகா என்னிடம் நம் குடும்பத்தை பிரிந்து வெவ்வேறு ஊரில் வசித்து வருவதற்கு காரணம் பிரேமலதா தான் என அடிக்கடி கூறி வந்தார். இதனால் பிரேமலதா மீது எனக்கு கடும் கோபம் இருந்து வந்தது. எனவே குடும்பத்தை பிரித்த பிரேமலதாவை கொலை செய்ய முடிவெடுத்தேன். அதன்படி அவரை கத்தியால் குத்திக்கொலை செய்தேன் என கூறினார். குடும்பத்தை பிரித்ததால் அண்ணியை கொழுந்தன் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.