உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் குடியிருப்பு மற்றும் அணிய கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “உள்ளாட்சி பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் கட்டிட விதிகள் மற்றும் அதற்கு அனுமதி வழங்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, “தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள், 2019” வெளியிடப்பட்டு 04.02:2019 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. அதன் அடிப்படையில் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கும் நேர்வில் கட்டிட விதிகள் முறையாக பின்பற்றப்படாமல் வழங்குவதாக பொது மக்களிடமிருந்தும், பல்வேறு சமூக ஆர்வலர்களிடமிருந்தும் புகார் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிட அனுமதி ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள், 2019-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கும் நேர்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள், 2019-ல் கட்டிட அனுமதி வழங்குவது குறித்தான விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். புதியதாக கட்டிட பணி தொடங்கும் இடங்களை ஆய்வு செய்து முறையான கட்டிட அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை நகரமைப்பு அலுவலர் அல்லது நகரமைப்பு ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும். கட்டிட அனுமதி வழங்கிய பின்னர் உரிய கால இடைவெளியில் ஆய்வு செய்து கட்டிட அனுமதியின் படி தான் கட்டிடங்கள் கட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். முறையான அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டுவது கண்டறியப்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கட்டிட அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டுவது கண்டறியப்பட்டாலோ அல்லது தவறானஆவணங்கள் அடிப்படையில் அனுமதி பெற்றுள்ளதாக தெரியவந்தாலோ வழங்கப்பட்டகட்டிட அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும். அனுமதியற்ற அல்லது அனுமதிக்கு மாறான கட்டுமானங்கள் மீது சட்ட ரீதியான அமலாக்கஜநடவடிக்கை மேற்கொள்வதுடன் நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்ட விதிகளில் குறிப்பிட்டவாறு குற்றவியல் நடவடிக்கை உட்பட அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.