ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், எம்மிராஜுலா கண்ட்ரிகா பகுதியில் நடத்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கலந்து கொண்டார். ஊர்வலம் முடிந்தவுடன் சிறுமி வீடு திரும்பவில்லை. அதன் பிறகு சுமார் மூன்று மணி நேரம் கழித்து அந்த சிறுமி அவர் உடுத்தியிருந்த உடைகள் கிழிந்து உடலில் பல இடங்களில் ரத்தக்காயங்களுடன் வீட்டிற்கு வந்தார்.
சிறுமியை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது பற்றி கேட்டபோது தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கே.வி.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்ததில், ஊர்வலத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு அவரை ஆட்டோவில் கடத்திச்சென்றது தெரியவந்தது.
அதன் பிறகு மறைவான இடத்தில் வைத்து மூன்று பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, ஆட்டோவில் சிறுமியின் வீட்டின் அருகே இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். பலாத்காரம் செய்தவர்களில் ஒருவர் அந்த பகுதியைச் சேர்ந்த குணா என்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.