பெங்களூருவில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன..
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்கள் கனமழை தொடர்ந்து வருகிறது.. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இந்நிலையில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் பெங்களூரின் முக்கிய சாலை நீரில் மூழ்கி உள்ளன.. மக்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் படகுகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்..
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/PTI08_30_2022_000135A_0_1200x768.jpg)
மாரத்தஹள்ளி, ஸ்பைஸ் கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.. ஸ்பைஸ் கார்டனில் இருந்து ஒயிட்ஃபீல்டு செல்லும் சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பூங்காக்களுடன் நகரை இணைக்கும் வெளிவட்டச் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ORR பெல்லந்தூர் Eco Space அருகே மழைநீர் வடிகால்களில் இருந்து தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது.. பெங்களூருவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மிக அதிகபட்ச மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இதற்கிடையில், கர்நாடகாவில் செப்டம்பர் 9 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. பெங்களூரு, கடலோர கர்நாடகாவின் 3 மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடகு, ஷிவமோகா, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களுக்கு இன்று முதல் வரும் 9 வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட மாவட்டங்களான பிதார், கலபுர்கி, விஜயபுரா, கடக், தார்வாட், ஹாவேரி மற்றும் தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், மேலும் பல பகுதிகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப தாழ்வாரங்களில், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெங்களூரு முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் வெள்ள நீரை தடுக்கும் ஆக்கிரமிப்புகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..