மும்பை மற்றும் சுற்றி இருக்கும் பகுதிகளில் மாங்குரோவ் என அழைக்கப்படும் சதுப்பு நில காடு அதிகளவில் உள்ளது. இந்த காடுகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் நவிமும்பை, வசாய் போன்ற பகுதிகளில் சமூகவிரோத கும்பலால் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன..
இந்தநிலையில் நவிமும்பையில் உரன் தாலுகாவில் இருக்கும் துடும் பகுதியில் லாரி நிறுத்தத்திற்காக மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், மும்பை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மாங்குரோவ் பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஸ்டாலின் ராய்காட் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் லாரி நிறுத்தத்திற்காக 20 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் புகாரில், தற்போது மாங்குரோவ் மரங்கள் வெட்டப்படுவதை பார்க்கமுடிகிறது. அந்த பகுதி லாரி மற்றும் கண்டெய்னர் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இது சாலையோரம் பல அதிகாரிகள் வந்து செல்லும் இடத்துக்கு அருகில் நடந்துள்ளது.
எனவே அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், அந்த இடத்தில் மீண்டும் மாங்குரோவ் காடுகளை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் சிட்கோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாளம் தெரியாதவர் மீது வழக்குப் பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.