மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிரதாப் என்பவது மகன் கௌதம் (26), ஏத் என்பவரது மகன் அமீத்பண்டிட் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள். வேலை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளனர். இவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம், பாப்பரம்பாக்கம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான ஷூ தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது
இதனையடுத்து, அதே பகுதியில் தொழிற்சாலைக்கு அருகிலேயே இவர்கள் இருவரும் வீடு எடுத்து தங்கி, அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கியுள்ள வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா. சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் மணவாளநகர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் பாப்பரம்பாக்கம் சென்று சோதனை செய்தனர். சோதனையின்போது இருவரும் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.