சென்னை மதுரவாயல் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பதிமூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுவாயல் வேல் நகர் பகுதியில் செந்தில்குமார் என்பவரின் மூத்த மகள் பூஜா (13) . விருகம்பாக்கத்தில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. டெங்கு பரிசோதனை, கொரோனா போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் என்ன காய்ச்சல் என கண்டுபிடிக்கமுடியவில்லை.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/மர்ம-காய்ச்சல்-1.jpg)
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் மகள் இறந்தார் என பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மகளுக்கு டெங்கு காய்ச்சலா ? பன்றிக் காய்ச்சலா, என்ன வகையான காய்ச்சல் என்பதை எங்களுக்கு இதுவரை அறிவிக்கவில்லை. 3 நாளில் எங்கள் மகளை இழந்துவிட்டோம் என கதறினர்.
இதே போல பல சிறுவர்கள் மர்ம காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் என்ன காய்ச்சல் என்பதை உறுதி செய்யவில்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து சுகாதார அதிகாரி ஒருவர் .. எங்களுக்கு இது தொடர்பான அறிக்கை வரவில்லை. பின்னர்தான் என்ன காரணம் என தெரியவரும் வழக்கமாக கொசு மருந்து அடிப்பது , தேங்கியுள்ள நீரை அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.