தேனி மாவட்டத்திலுள்ள பொம்மையகவுண்டன்பட்டியில் ராஜா என்ற 30 வயது நபர் ஒரு மாதத்திற்கு முன் காவியா என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் போடியில் இருக்கும் ராஜா உடைய அக்கா வீட்டிற்கு திருமண விருந்திற்கு சென்றனர்.
இதன் பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து ராஜா மற்றும் காவியா இருவரும் அங்கிருக்கும் ஆட்சி பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி இருவரும் குளித்த போது அக்கா மகன் சஞ்சய், காவியா, ராஜா உள்ளிட்ட மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதனால் பதற்றம் அடைந்த பிரணவ் என்ற உறவினர் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரும் சேர்ந்து காணாமல் போன மூன்று பேரையும் தேடினர்.
அதன் பின் நீண்ட நேரத்திற்கு பிறகு மூன்று பேரையும் சடலமாக மீட்டுள்ளனர். ராஜா, சஞ்சய், காவியா ஆகியோரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுமண தம்பதி விருந்துக்கு சென்ற இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.