கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் துளசி நகர் என்ற பகுதியில் வசித்து வருகின்றார் முருகேசன். இவருக்கு பொறியியல் பட்டதாரியான ஒரு மகளும், 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில், முருகேசன் தன்னுடைய மகளுக்கு ஓசூரைச் சார்ந்த திலக் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.
ஆனால் முருகேசனின் சொந்தக்காரரான கெலமங்கலம் பகுதியைச் சார்ந்த திருமூர்த்தி என்ற நபர் நிச்சயதார்த்தம் நடைபெற்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தனக்கு பெண் கொடுக்க மறுத்த முருகேசனின் வீட்டிற்கு சென்ற திருமூர்த்தி, முருகேசனுடன் சண்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அத்துடன் அவர் மறைத்து எடுத்துச் சென்றிருந்த கத்தியால் முருகேசனை பலமுறை குத்தி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.
இதனை கவனித்த அண்டை வீட்டார்கள் முருகேசனை சிகிச்சைக்காக கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச்சென்று, அங்கு முதலுதவி வழங்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக ஓசூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெலமங்கலம் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.