ஓதியத்தூர் கோயிலில் நேர்த்திக்கடனாக சாப்பிட்ட எச்சில் இலை மீது பக்தர்கள் உருளும் விநோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒதியத்தூரில் பிரசித்தி பெற்ற விருபாக்ஷீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் மஹந்யாச விழா நடைபெற்றது. இதில், பூர்வ ஏகாதேச ருத்ரா அபிஷேக தீபாதரனை ஆகியவற்றை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஆத்தூர் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான வேத விற்பனர்கள் 5 பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது. அதற்கு முன்பு விருந்து சாப்பிட உட்கார்ந்தவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். 5 பேரும் சாப்பிட்டு முடித்த பின் எச்சில் இலையை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டனர். தொடர்ந்து பல்வேறு வேண்டுதலுடன் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் எச்சில் இலை மீது உருளுதண்டம் போட்டு நேர்த்தி கடனை செலுத்தினர். உருண்டு முடித்த பிறகு அந்த எச்சில் இலைகளை தலைகளில் சுமந்து சென்று அப்புறப்படுத்தினர்.

இந்த கோவிலில் எச்சில் இலை மீது உருளுதண்டம் போட்டும் நேர்த்திக் கடனை செலுத்தினால், பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், பக்தர்கள் இன்றும் வேண்டுதல் வைத்து எச்சில் இலை மீது உருளு தண்டம் போட்டனர்.