தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல், தீவிர புயலாக வலுவடைந்தது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி மத்திய வங்க கடலை நோக்கை நகர்ந்துள்ளது. இது படிப்படியாக கடுமையான தீவிர புயலாக மாறி, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மோக்கா புயல் கடந்த 14ஆம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மர்க்கு இடைப்பட்ட பகுதியில் மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்துடன் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி வரை, வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நேரடியாக, தமிழகம், ஆந்திராவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய மோக்கா புயல் , தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. திருச்சி அரியமங்கலம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.