சாதி மாறி திருமணம் செய்ததால் மருமகன் என்று கூட பாராமல் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி பகுதியைச் சேர்ந்தவர் தம்மனகவுடா. இவரது மகள் பாக்யஸ்ரீ என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த புஜபாலி கர்ஜகியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இருவீட்டாருமே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பாக்யஸ்ரீ, புஜபாலி ஆகிய இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பெலகாவி மாவட்டத்தில் 2 பேரும் வீடு வாடகை எடுத்து இரண்டு ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி அங்கு தனியாக வீடு வாடகை எடுத்து தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பைக்கில் சென்றுக்கொண்டிருந்த புஜபாலாவை பெண்ணின் தந்தை தம்மனகவுடா வழிமறித்துள்ளார். அப்போது, மருமகன் என்றும் பாராமல் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த புஜபாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் இது ஆணவக்கொலை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தையை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.