ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு – தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடும்.
அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24-ம் தேதி ஒருசில இடங்களிலும், உள்தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
![’இந்த 2 நாட்களும் கொஞ்சம் கவனமா இருங்க மக்களே’..!! அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/Chennai-Rain-3-1024x683.jpg)
மேலும் 25-ம் தேதி தென் தமிழ்நாடு மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26-ம் தேதி தென் தமிழ்நாடு மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/IMG_20221223_060635-1024x508.jpg)