தென்னை ஏறும் தொழிலாளர்கள் விபத்து காப்பீட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்..
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு அரசு கலைஞரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வயதானோர்களுக்கான ஓய்வூதியம், கல்வி, மருத்துவச் செலவு, விபத்து உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. மேலும் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தென்னை மரம் ஏறுபவர்களுக்கான கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம் முக்கியமானதாகும். தென்னை மரங்களில் தேங்காய் அல்லது இளநீர்க் காய்களை பறித்தல், நீரா பானம் இறக்குதல், பழைய தென்னை ஓலைகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்காக, வேளாண் தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

தென்னை மரம் மிகவும் உயரமாக இருப்பதால், மரம் ஏறும் தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதனால், இத்தொழிலாளர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் இவ்விபத்தினால் உயிரிழப்பும் நிகழ்வதுண்டு. எனவே, இத்தகைய ஆபத்துகள் நிறைந்த இப்பணிகளை மேற்கொள்ளும் வேளாண் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, தென்னை வளர்ச்சி வாரியத்தால் இக்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இக்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் தென்னை மரம் ஏறும்போது விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்திற்குள் உயிர் இழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால், ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக அவரின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது. நிரந்தரமாக, பகுதி உடல் ஊனம் அடைந்தால், ரூ.2.5 லட்சம், மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம், தற்காலிக முழு உடல் ஊனத்திற்கு ரூ.18,000, உதவியாளர் செலவுக்காக ரூ.3,000, ஆம்புலன்ஸ் செலவுக்காக ரூ.3,000 மற்றும் இறுதிச் சடங்கு செலவுக்காக ரூ.5,000 பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு செய்து கொள்ள வருடந்தோறும் ரூ.375 காப்பீட்டுத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் தங்களின் பங்கு தொகையாக 25% தொகை, அதாவது வருடத்திற்கு ரூ.94 செலுத்த வேண்டும். தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனுக்காக, மீதமுள்ள 75% தொகையான ரூ.281-யை தென்னை வளர்ச்சி வாரியமே செலுத்தும். விருப்பமுள்ள பயனாளிகள் தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதள முகவரி http://www.coconutboard.gov.in/ல் உள்ள விண்ணப்பத்தில், பெயர், ஆதார் எண், கைபேசி எண், இருப்பிட முகவரி, பிறந்த தேதி, வாரிசு நியமனம் உள்ளிட்ட விவரங்களுடன், உங்கள் பகுதி வட்டார வேளாண்மை அலுவலரின் சான்றிதழுடன் காப்பீட்டுத் தொகையை வரைவோலையாகவோ, Google Pay, PayTM அல்லது Phonepay மூலமாகவோ பணம் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.
இது தொடர்பாக சந்தேகம் இருந்தால், உங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலர்களை அணுகலாம். தென்னை மரம் ஏறும் வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் இக்காப்பீட்டுத் திட்டத்தில் அதிக தொழிலாளர்கள் இணைந்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளது.