தைவானை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளது.
தைவானின் டாயூவான் நகரை தலைமையிடமாகக் கொண்டு எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திடம் 150-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் உள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இந்த நிலையில், கொரோனா லாக்டவுனுக்கு பிறகு உலகளாவிய கப்பல் சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்ததால் இந்த நிறுவனம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
லாபத்தை தங்கள் ஊழியர்களுக்கும் பகிந்தளிக்க எண்ணிய அந்த நிறுவனம், கிட்டதட்ட 50 மாதங்களுக்கான சம்பளத்தை போனசாக அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கப்பல் நிறுவனம், உக்ரைன் போரால் சரக்கு கப்பல் போக்குவரத்து வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் சரக்கு கப்பல் போக்குவரத்து ஊக்கம் பெறும் என்றும், இதனால் தங்கள் நிறுவன வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அப்படி ஒருவேளை வருவாய் அதிகரித்தால் ஊழியர்களுக்கு இதைவிட கூடுதலாக போனஸ் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற கப்பல் இந்த எவர் கிரீன் நிறுவனத்துடையது என்பது குறிப்பிடத்தக்கது.