தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா நேற்று 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி இலங்கையை வாஷ் அவுட் செய்தது. நேற்றைய போட்டிகளில் விராட் கோலி மிக அபாரமாக விளையாடி 166 ரன்கள் குவித்தார். அதில், 8 சிக்ஸர்களும் 13 பவுண்டர்களும் அடங்கும். இந்நிலையில், இந்த போட்டியின் 44 வது ஓவரை வீசிய ரஜிதாவின் நான்காவது பந்தை கோலி சிக்ஸராக பறக்க விட்டார். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஸ்டைலில் விளாசிய கோலியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, உலகிலேயே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன்னாள் கடந்த 2008ஆம் ஆண்டு அயர்லாந்த அணிக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்ச வெற்றியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்றுச் சாதனையை எந்த ஒரு அணியும் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாது என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.