கேரளாவில் ஒரே உணவகத்தில் சாப்பிட்ட 68 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலம் ஏர்ணாகுளத்தில் மஜ்லிஸ் என்ற அரபியன் உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் அல்-ஃபஹாம் மற்றும் ஷவாய் ஆகிய இரண்டு பிரபலமான அரபு உணவுகளை அங்கு வந்தவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 68 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் ஏர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வடபரவூர் நகராட்சி தலைவர் வி.ஏ.பிரபாவதி கூறுகையில், ”சம்பந்தப்பட்ட ஹோட்டல் மூடப்பட்டுவிட்டது. அதற்கு முன் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏர்ணாகுளத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளனர். தேர்வுக்கான கடைசி நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக அரபியன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். இதில், 68 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது உரிமம் இல்லாமல் செயல்படும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு துறைக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.