கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூருவிலிருந்து சில குடும்பங்கள் ஆன்மீக யாத்திரைக்காக மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அதில் 15 வயதான சிறுமி சுமிதாவின் குடும்பமும் ஒன்று. பெற்றோருடன் வந்த சுமிதா, கோவிலின் வழிபாடுகளை முடித்துவிட்ட நிலையில் மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில், கடல் சீற்றத்தின் தீவிரத்தை அறியாமல் அனைவருமே கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை சுமிதாவை அடித்து உள்ளே இழுத்துச் சென்றது. வேகமாக வந்த அலையானது நடுக்கடலுக்குள் சுமிதாவை இழுத்துச் சென்றுவிட்டதால் யாராலும் அவரை காப்பாற்ற இயலவில்லை.
இதனை தொடர்ந்து உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மாமல்லபுரம் கடலில் எங்கும் சுமிதாவை தேடியுள்ளனர். வெகு நேரம் போராடியும் சுமிதா கிடைக்கவில்லை. 1 மணி நேரம் கழித்த பின்னரே சுமிதாவின் உடலானது கரை ஒதுங்கியது.
பின்னர், 108 ஆம்புலன்ஸ் குழுவினர் வந்து, சுமிதாவின் உடலை பரிசோதனை செய்தனர். பரிசோதித்த அவர் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மாமல்லபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த சிறுமி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாத்திரைக்கு வந்த மற்ற பக்தர்கள் அனைவரும் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு சிறுமி இறந்த துக்கத்தில் மாமல்லபுரத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியது பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.