தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஐஏஎஸ் நகரில் வசித்து வருபவர் தொழிலதிபர் நேதாஜி. இவரது தம்பி தேவேந்திரன். இவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தேவேந்திரனின் மகன் நிச்சயதார்த்த விழா திருச்சியில் நடைபெற்றது. இதற்காக குடும்பத்தினர் அனைவரும் திருச்சிக்கு வந்துவிட்டனர். நேதாஜியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை உணர்ந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் லாக்கரில் வைத்திருந்த 300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கொள்ளையர்களை பிடிப்பதற்காக டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொழிலதிபர் நேதாஜியின் வீட்டில் உள்ள பூட்டுக்கள் சென்சார் என்பதால், இதை பற்றி நன்றாக விவரம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற சந்தேகம் காவல்துறையினரிடையே எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.