தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் புறக்கணித்துள்ளார்..
நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதனை முன்னிட்டு மத்திய மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.. குடியரசு தின விழாவில் டெல்லியில் குடியரசு தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்களும் கொடியேற்றுவது வழக்கம்.. அந்த வகையில் தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாநில அளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தேசிய கொடியை ஏற்றினார்..

முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழிசை பின்னர் ராஜ்பவனில் தேசிய கொடி ஏற்றினார்.. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.. ஆனால் இந்த குடியரசு தின நிகழ்வை தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் புறக்கணித்துள்ளார்.. சந்திரசேகர ராவுக்கும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.. மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார்..
மேலும் பிரதமர் மோடி தெலங்கானாவுக்கு வருகை தந்த போது கூட முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அவரை வரவேற்காமல் புறக்கணித்தார்.. இந்த மோதல் போக்கு தற்போது ஆளுநர் தமிழிசை மற்றும் தெலங்கான அரசு இடையேயான மோதலாக தொடர்ந்து வருகிறது.. இதன் காரணமாக ஆளுநரின் குடியரசு தின விழாவை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..