கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் குட்டேனஹள்ளி பகுதியைச் சார்ந்தவர் ஆதி. இவரது மனைவி ஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். கணவர் ஆதி அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த ஆதி மனைவியின் கழுத்தை நெரித்து இருக்கிறார். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட மனைவி ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத கணவர் ஆதி இந்த குற்றச்செயலில் இருந்து தப்பிக்க தன் மனைவி தற்கொலை செய்து விட்டதாக நாடகமாடி காவல் நிலையத்தில் பொய் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இறந்த ஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது ஸ்ரீயின் குடும்பத்தார் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையை ஸ்ரீயின் கணவர் ஆதியிடம் விசாரணை நடத்தியது. இதில் குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரத்தில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார் ஆதி. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.