தன் காதலியின் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காதலனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஜவுளி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கணவரால் கைவிடப்பட்ட அந்தப் பெண் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில் 26 வயது இளைஞனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு அந்த இளைஞருடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார் அந்த இளம் பெண்.
கடந்த திங்கள்கிழமை வழக்கம் போல் வேலைக்குச் சென்ற அந்தப் பெண் திரும்பி வந்து பார்த்தபோது தனது குழந்தை மயக்க நிலையில் இருந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி யடைந்த அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த அந்தப் பெண் தன் காதலரிடம் விசாரித்த போது அந்தப் பெண்ணை தாக்கத் தொடங்கிருக்கிறார் அவரது காதலர். இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறை விசாரணை நடத்தியதில் கஞ்சா போதையில் அந்தப் பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டிருக்கிறார் அந்த போதைக்கு அடிமையான இளைஞர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்திருக்கிறது காவல்துறை. போதை இளைஞரால் பச்சிளம் குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்திருக்கிறது.