இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு SSLC மற்றும் அதற்குகீழ் படித்தவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சேர்த்து, வழங்குவதற்கு பதிலாக, மாதம் தோறும் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது.

எனவே, கீழ்க்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், உதவி தொகைபெற, விண்ணப்பங்கள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான மற்றும் வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்க கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள்.
இவ்வுதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உடையவர்கள் விண்ணப்பப் படிவங்களை திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 28.02.2023 வரை திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளித்திட வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு பெறாமல் 2022-2023ஆம் நிதியாண்டிற்கு சுய உறுதி ஆவணம் அளிக்காதவர்கள், 28.02.2023-க்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.