திருவண்ணாமலையில் ஒரே இரவில் பல ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும், உள்ளூர் மக்களின் பயன்பாடு போன்ற செயல்களால் எப்போதும் திருவண்ணாமலை பரபரப்பாகவே இருக்கும். இதனிடையே இங்குள்ள மாரியம்மன் கோவில் 10-வது தெருவில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் நேற்றிரவு புகுந்த கொள்ளையர்கள், கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சத்தை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் மர்மநபர்கள் புகுந்து ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடி சென்றுள்ளனர். அதேபோல், போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.56 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து லட்சக்கணக்கான ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.