விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அளித்த பேட்டியால் பெரும் பரபரப்பு கிளம்பிய நிலையில், பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ”பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன்” என கூறினார். இந்நிலையில், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை எனக்கூறிய இலங்கை ராணுவம், பழ.நெடுமாறனின் கருத்தை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக இலங்கையில் ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹெரத் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது இதுபோன்று வெளியாகும் தகவல்கள் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்க திட்டமிட்டும் பரப்பப்படும் வதந்திகளை எனவும், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லாத சூழ்நிலையில் சில குழுக்கள் இலங்கை பொருளாதார நெருக்கடி, சிக்கல்கள் இது போன்ற தேவையற்ற தகவல்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தற்போது திடீர் குழப்பம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? இலங்கையில் இருந்து ஏதேனும் குழுக்கள் இதுபோன்று தகவல்களை பரப்பி வருகிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.