இந்தியாவில் எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது..
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் 47,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது..

இந்நிலையில் இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI – National Geophysical Research Institute) கணித்துள்ளது.. இது எதிர்காலத்தில் உத்தரகாண்ட் மற்றும் நேபாளத்தை பாதிக்கும் சாத்தியம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
NGRI யின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ பூமியின் மேற்பரப்பில் பல்வேறு தட்டுகள் உள்ளன, அவை தொடர்ந்து இயக்கத்தில் உள்ளன, மேலும் இந்திய தட்டு வருடத்திற்கு 5 செமீ நகர்கிறது, இது இமயமலையில் அழுத்தம் குவிவதற்கு வழிவகுக்கிறது. குவிந்துள்ள அழுத்தம், மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

இமாச்சலத்திற்கும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கும் இடையே உள்ள நில அதிர்வு இடைவெளி என குறிப்பிடப்படும் பகுதி, அதாவது உத்தரகாண்ட் உட்பட பல இடங்களிலும் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் இருக்கக்கூடும்..” என்று தெரிவித்தார்..
சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் குறித்து பேசிய அவர், கட்டிடங்களின் தரம் குறைந்ததால்தான் நாட்டில் சேதம் அதிகம் என்று கூறினார். மேலும் “ பூகம்பங்களைத் தடுக்க முடியாது, ஆனால் இழப்பைத் தடுக்க முடியும். நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன, எனவே பொதுமக்கள் அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்,” என்று தெரிவித்தார்..