தர்மபுரியில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் நடத்தி வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ மற்றும் ஊடகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர்கள் ஒழிப்பு குழுவினர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறை 60 வயது நபர் ஒருவரை கைது செய்து இருக்கிறது. இது தொடர்பாக நாயக்கன் கொட்டாய் பகுதியில் பத்தாண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த கண்ணன் என்பவரின் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.
அவரது மருத்துவமனையில் உரிமை மற்றும் கல்விச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை பரிசோதித்த போது தான் மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவமனை நடத்தி வந்ததை ஒத்துக் கொண்டார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக கூறிய கண்ணன் தனது தந்தை இறப்பதற்கு முன் அவருக்கு உதவியாக ஹோமியோபதி மருத்துவத்தில் இருந்திருக்கிறார். அவரது தந்தை இறப்பிற்கு பின் இவர் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது ஊசி போடுவது என மருத்துவ பணிகளை அனுபவரீதியாக செய்து வந்தது விசாரணையில் தெரிந்திருக்கிறது. இதனையடுத்து போலி மருத்துவர் கண்ணனை கைது செய்த காவல்துறை அவரிடமிருந்து மருந்து ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.