இந்திய தலைநகர் டெல்லியின் நங்ளாய் பகுதியில் 11 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி நங்ளாய் பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் தனது 11 வயது மகள் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பவில்லை என பிப்ரவரி 9 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக அந்த சிறுமியை தேடி வந்தனர். சிறுமி காணாமல் போன இடத்தில் இளைஞர் ஒருவரின் செல்போன் சிக்னல் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததையடுத்து அந்த இளைஞரின் செல் போன் நம்பரை காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அந்த இளைஞரின் செல்ஃபோன் சிக்னல் மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இருப்பதாக காட்டியது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அந்த இளைஞரை கைது செய்தது. ராகுல் என்ற அந்த 21 வயது இளைஞர் சிறுமியை கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ததை காவல்துறையிடம் ஒத்துக் கொண்டார் .
பிப்ரவரி 9 ஆம் தேதி அந்த சிறுமியை தான் கடத்திச் சென்று ஆளில்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை கொலை செய்து இருக்கிறார் அந்த இளைஞர். மேலும் அவர் காவல்துறையினர் மற்றும் தடையவியல் நிபுணர்களை அழைத்துக் கொண்டு அந்த சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை அடையாளம் காட்டியிருக்கிறார். அந்த இடத்திலிருந்து சிதைந்த நிலையில் இருந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதிச் சடங்கிற்காக உடல் சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை செய்த நபர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் பற்றி காவல்துறை தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை. மேலும் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா? என்பதைப் பற்றியும் காவல்துறையை தகவல் தெரிவிக்கவில்லை.