ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் என 77 பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவின் போது அடையாளத்திற்காக விரலில் வைக்கப்படும் மை தரமானதாக இல்லையென புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் தேர்தல் பிரிவு துணை செயலாளருமான இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், வாக்களித்ததன் அடையாளமாக விரலில் வைக்கப்படும் மை யின் தரம் மோசமாக இருப்பதாகவும், இதன் காரணமாக கள்ள ஓட்டுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். எனவே தரமற்ற மையை மாற்ற வேண்டும் என இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.