சமீபகாலமாக தமிழகத்தில் இருக்கும் வட மாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவதால் அவர்கள் அச்சமடைந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இதனை தவறான செய்தி என்று மாநில அரசும், காவல்துறையும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல்களை தெரிவித்து இருந்தார். இது குறித்து விசாரணை நடத்துவதற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஆகவே கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட விசாரணையில் சுபம் சுக்லா என்பவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான கருத்தை பதிவிட்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.