திருச்சியில் வாக்கிங் சென்ற பேராசிரியை தாக்கி இழுத்துச் சென்று அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி நகரைச் சார்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 12ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள சாலையில் அமைந்திருக்கும் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியின் மைதானத்திற்கு நடை பயிற்சிக்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சீதாலட்சுமி தனியாக நடைபயிற்சி சென்று வருவதை கவனித்த மர்ம நபர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்.
சீதாலட்சுமி தனது இருசக்கர வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கியதும் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயடைந்த சீதாலட்சுமியை ஏதோ ஒன்றை இழுத்துச் செல்வது போல் தரதரவென இழுத்துச் சென்று ஓரமாக போட்டுவிட்டு அவரது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறை அந்த மர்ம நபரை தேடி வந்தது. காவல்துறையின் விசாரணையில் அந்த நபர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த செந்தில்குமார் என்பதும் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான அந்த நபர் தாராநல்லூர் கீரை பஜார் பகுதியில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்ய சென்றபோது திருடிய இரு சக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தடுப்பு கட்டையில் மோதி கீழே விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.