சுடுகாடு என்றாலே மனதிற்குள் ஒருவித பயமும் தனிமையான உணர்வும் ஏற்படுவதை தான் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் இங்கு ஒரு சுடுகாடு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என ஒரு மன மகிழ் பூங்காவை போல அமைந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா???? ஆம்! குஜராத்தில் அமைந்துள்ள திசா என்ற சுடுகாடு தான் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பனிரெண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுடுகாடு ஒரு தகனம் செய்யும் இடமாக மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடனும் அமைக்கப்பட்டு இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். பனாஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடுகாட்டின் வாயிலே மிகப்பெரிய நட்சத்திர விடுதி போல பிரம்மாண்டமாக இருக்கிறது.
இந்த இடுகாட்டிற்குள் தகனம் செய்வதற்கான பிரார்த்தனை கூடம், முதியவர்களுக்கான நூலகம், பெரிய தோட்டம், குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா, குளியலறைகள், கழிவறைகள் என பிற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கிராமிய வாழ்வை சித்தரிக்கும் ஓவியங்களும், மழை நீர் சேகரிப்பு தொட்டிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடுகாடு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி முழுவதுமாக தகனம் செய்வதற்கும் மற்றொரு பகுதி பிக்னிக் ஸ்பாட்டாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தகனம் செய்வதற்கு 1/- ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த திசா இடுகாடு வழக்கமான இடுகாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.