விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேல்சாமி, இவருடைய மனைவி செல்வி. இந்த தம்பதிகளுக்கு ரூபன்(14) என்ற மகன் இருந்தார்.
இவர் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருக்கின்ற தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார் மாணவர் ரூபன்.
இத்தகைய நிலையில் தான் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் இருக்கின்ற பெற்றோரின் வீட்டிற்கு வந்திருந்தார் மாணவர் ரூபன். நேற்று அந்த பகுதியில் உள்ள கண்மாய்க்கு ரூபன் குளிப்பதற்காக சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கண்மாயில் இறங்கிய ரூபன் ஆழமான பகுதிக்குச் சென்று சிக்கிக்கொண்டார். ஆகவே அங்கிருந்து வெளியேற முடியாமல் மாணவர் ரூபன் தண்ணீரில் மூழ்கினார். இது தொடர்பாக தகவல் அறிந்த எம் ரெட்டியப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கண்மாயில் மாணவனை தீவிரமாக தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு மாணவர் ரூபன் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில், ரூபனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைக்கும் விதமாக இருந்தது. ஆகவே மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
கண்மாயில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.