சென்ற சனிக்கிழமை சென்னையிலிருந்து குருவாயூர் நோக்கி சென்ற விரைவு ரயில் திருச்சி வந்த போது எஸ்-1 கோச்சில் வந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக ஒரு டிராவல் பேக்கை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பேக்கை மிகவும் பாதுகாப்பாகவும் காவல்துறையினர் ரோந்து பணிக்கு வந்தபோது மறைத்து வைத்தும் பயணம் செய்திருக்கிறார். இதனை கண்காணித்த சக பயணிகள், ரயில்வே காவல்துறைக்கு தொலைபேசியின் மூலமாக தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் மணப்பாறை ரயில் நிலையம் பகுதிக்கு அந்த ரயில் வந்த போது ரயில்வே காவல்துறையினர் ரயிலுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். இதை கவனித்த அந்த மர்ம நபர், தான் கொண்டு வந்த டிராவல் பேக்கை இருக்கையில் வைத்து விட்டு ரயிலை விட்டு இறங்கி தப்பி சென்று விட்டார்.
பிறகு ரயில் மதுரை சமயத்திற்கு வந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த டிராவல் பேக்கை rpf காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் உள்ளிட்டோர் கண்காணித்து வந்தனர். ஆனால் கேட்பதற்கு ஆளில்லாமல் கிடந்த அந்த பேக்கை எடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விருதுநகர் ரயில் நிலையத்தில் மர்ம பேக்கை பறிமுதல் செய்து இறக்கி வைத்தனர்.
அதன் பிறகு விருதுநகர் சந்திப்பில் உள்ள ரயில்வே காவல் நிலையத்திற்கு அந்த பேக்கை காவல்துறையினர் வந்து சென்று திறந்து பார்த்தபோது, அதில் 6 பொட்டலங்களில் 15 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை மதுரையில் உள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதோடு, ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த நபர் யார்? என்பது தொடர்பாக விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.