விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்துள்ள கடையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(40) இவர் அதே கிராமத்தில் காப்புக்காடு அருகே விவசாயம் செய்து வருகிறார் இவருடைய மனைவி கலையம்மாள்(32) இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளிட்டோர் இருக்கின்றன. இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பாரதி (23) என்பவர் சிறு வயதிலேயே தன்னுடைய தாயை இழந்து தந்தையும் கண்டு கொள்ளாத நிலையில் இருந்தார். இத்தகைய நிலையில்தான் கோவிந்தன் பாரதியை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கோவிந்தனின் நிலம் ஊருக்கு எல்லை பகுதியில் காப்புக்காடு அருகே இருக்கிறது. இவருடைய நிலத்திலேயே வீடும் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, பாரதி அடிக்கடி தந்தை வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு காட்டுப்பன்றி வேட்டைக்காக சென்று வருவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கோவிந்தனின் மூத்த மகள் மீது பாரதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவிந்தனிடம் பாரதி கோவிந்தனின் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதில் அந்த பெண்ணிற்கு விருப்பமில்லாத நிலையில், கோவிந்தன் பாரதியின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் இதனால் கோபமடைந்த பாரதி, நேற்று மாலை கோவிந்தன் வீட்டில் பால் கலந்து கொண்டிருந்தபோது வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோவிந்தனின் தலையில் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கோவிந்தனின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த அவருடைய மனைவி வெளியே ஓடி வந்தார்.
இந்த நிலையில், அவரையும் நாட்டு துப்பாக்கியால் பாரதி காலில் சுட்டு இருக்கிறார். இருவரின் அலறல் சத்தமும் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து பாரதி நாட்டு துப்பாக்கியுடன் காப்பு காட்டில் ஓடி தப்பி சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தம்பதியினரை மீட்டு அவசர உறுதியின் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது அதோடு, இது தொடர்பான தகவல் அறிந்த, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், துப்பாக்கியால் பெற்றோரை சுட்டு விட்டு தப்பிச்சென்ற வளர்ப்பு மகன் பாரதி அருகில் உள்ள காப்பு காட்டினுள் பதுங்கி இருக்கிறார். அவரை தேடி விழுப்புரம் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் காவல்துறையினர் காட்டுக்குள் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் வருவதை கண்ட பாரதி, காப்பு காட்டில் உள்ள பாறையின் மீது ஏறி, காவல்துறையினரை தான் வைத்துள்ள நாட்டு துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்றும், நாட்டு வெடிகுண்டை கையில் வைத்திருக்கிறேன், அதனை வீசிடுவேன் என்றும் கொலைமிரட்டல் விடுத்திருக்கிறார். அதன் பிறகு பாறைக்கு பின்புறமாக சென்று காப்பு காட்டில் மறைந்துள்ளார். இதனை தொடர்ந்து, தப்பிச் சென்ற அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.