சென்னை முகப்பேறு பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் அப்பகுதியில் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வந்தார். மேலும், இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து திருமங்கலம், முகப்பேர், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் உட்பட பல பகுதிகளில் வலம் வந்துள்ளார். அங்குள்ள பூங்கா பகுதிகளில் விளையாடும் மற்றும் சாலைகளில் செல்லும் சிறுமிகள், பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அதாவது பெண்களிடம் சென்று முகவரி கேட்பது போல் கேட்பார். பின்னர் திடீரென அந்தபெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவார்.
இது தொடர்பான புகார்கள் அதிகரித்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சரவணன் இதையே வாடிக்கை வைத்திருந்ததும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உறுதியானது. பின்னர் ஜெ.ஜெ. நகர் போலீசார், தனிப்படை அமைத்து சரவணனை தேடி வந்தனர். இந்நிலையில், சைக்கோ சரவணன் முகப்பேரில் பதுங்கியிருந்தபோது அவரை கைது செய்ய சுற்றிவளைத்தனர்.
ஆனால், அவர் போலீசார் பிடியில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். அவரை துரத்திச் சென்ற போது சைக்கோ சரவணன் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் கை உடைந்தது. இதனையடுத்து அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். சைக்கோ சரவணனின் இந்த செயலால், அப்பகுதி பெண்கள் பீதியில் உள்ளனர்.