காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர், சொந்தமாக கார் வைத்துக் கொண்டு வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஜிஷ்ணு என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சரண்யா பிஇ படித்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், வேலைக்கு சென்று வந்தால் தங்களது குழந்தையை கவனிக்க முடியாது என்பதால் மதன்குமார் தனது மனைவி சரண்யாவை வேலைக்குச் செல்ல வேண்டாம் என கூறி கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் தனது குழந்தை ஜிஷ்ணு உடன் சேர்ந்து தூக்கி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சிவ காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரண்யா, குழந்தை ஜிஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.